பங்களாதேஷ் வங்கியிடம் இருந்து இலங்கை பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

கடனை திருப்பிச் செலுத்தும் மூன்று மாத கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கால அவகாசம் நீடிக்கப்பட்டது என பங்களாதேஷ் வங்கி அறிவித்துள்ளது.

பங்களாதேஷ் ஊடனான நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் மூன்று தவணைகளின் அடிப்படையில் 200 மில்லியன் டொலர் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

கடந்த ஓகஸ்ட் 19 இல் 50 மில்லியன் டொலர்களையும் 100 மில்லியன் டொலர் இரண்டாவது தவணை ஓகஸ்ட் 30 அன்றும் 50 மில்லியன் டொலர் இறுதி தவணை செப்டம்பர் 21 அன்றும் வழங்கப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, பங்களாதேஷூக்கு கடன் தொகைக்கு வட்டியாக 2 சதவீதத்தை இலங்கை அரசாங்கம் செலுத்தவேண்டும்.

ஆறு மாதங்களுக்குப் பின்னரும் தவணை நிதி செலுத்தப்படாமல் இருந்தால், 2.5 சதவீதம் மற்றும் கடன் தொகை திருப்பிச்செலுத்த வேண்டும்.

எனினும் இலங்கை குறைந்தபட்சம் ஒன்பது மாதங்களுக்கு இந்த நிதியைப் பயன்படுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக பங்களாதேஷ் மத்திய வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக இலங்கையின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதனால் கடந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரம் 3.4 சதவீதமாக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.