இலங்கை பிரஜை  வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் முடிப்பதாக இருந்தால் அதுதொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் பூரண அனுமதி பத்திரம் ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என பதிவாளர் நாயகத்தினால் சுற்று நிருபம் வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.  

நாட்டு பிரஜைகளின் சுதந்திரத்தை வரையறுப்பதற்காக அரசாங்கம் எடுத்திருக்கும் இந்த தீர்மானத்தை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம் என சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை பிரஜை ஒருவர் வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் செய்வதாக இருந்தால், பாதுகாப்பு அமைச்சின் பூரண அனுமதி பத்திரம் ஒன்றை பெற்றுக்கொள்ளவேண்டும் என பதிவாளர் நாயகத்தினால் சுற்று நிரும் ஒன்று வெளியிட்டிருப்பதாக தெரியவருகின்றது. 

அவ்வாறாக இருந்தால், அது அரசாங்கம் எடுத்திருக்கும் தான்தோன்றித்தனமான நடவடிக்கை என்பதுடன் அருவருக்கத்தக்க செயலாகும். நாகரிமான ஒரு அரசாங்கம் ஒருபோதும் பிரஜைகளின் முக்கியமான தனிப்பட்ட சுதந்திரத்துக்கு சட்டம் இயற்றுவதில்லை.

அரச நிர்வாகம் என்பது அறிவியல் தத்துவங்களின் அடிப்படையில் அமையவேண்டுமே தவிர, குடும்பங்களின் சாதாரண நிலைமைக்கு சட்டம் அமைக்கும் செயற்பாடு அல்ல. இலங்கையில் திருமணம் முடிக்கும் சுதந்திரத்துக்கு ஏற்றவகையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த புதிய வரையறையானது இலங்கை பிரஜைகளை இரண்டு முறைகளில் நடத்துவதற்கான அடித்தளமாகும்.