பிலியந்தலை, தொலே மயானப் பகுதியில் உள்ள இரண்டு மாடிக் கட்டட வீடொன்றில் இயங்கிவந்த இழை (ஃபைபர்) வாகன உதிரிபாக உற்பத்தி நிலையமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பிலியந்தலை காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனால் குறித்த கட்டடம் முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த தெஹிவளை – கல்கிசை மாநகர சபையின் மூன்று தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் ஒரு மணித்தியாலத்திற்குள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தீயினால் மேல் தளம் முழுமையாக தீக்கிரையானதுடன், பெருமளவிலான வாகன ஃபைபர் பாகங்கள் மற்றும் பல தளபாடங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

சம்பவத்தினால் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள காவல்துறையினர், மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.