மன்னார் மாவட்ட மக்களின் நலனை கருத்திற்கொண்டும் மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான கடை தொகுதிகளுடன் கடுமையான சுகாதார நடைமுறைகளுடன் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.

இன்று  அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, அவர், மேலும் கருத்து தெரிவிக்கையில், “இவ் வருடம் நத்தார் புது வருட பண்டிகைகளை முன்னிட்டு மன்னாரில் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை கடுமையான சுகாதார நடைமுறைகளுடன் முன்னெடுக்க மன்னார் நகர சபையால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நகர சபை வருமானத்தை ஈட்டும் நடவடிக்கையாக இதனை முன்னெடுக்கவில்லை. மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கோடு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக மன்னார் நகர சபையினால் மன்னாரில் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

எனினும் குறித்த காலப்பகுதியில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. நாங்கள் மக்களுக்கு பல வழிகளிலும் அறிவுறுத்தல்கள் வழங்கியபோதும் மக்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை.

பஜார் பகுதி உள்ளடங்கலாக மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஒவ்வொரு வர்த்தக நிலையங்களிலும் அதிகூடிய மக்களே கூடி நின்றமை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இதனால் கொரோனா தொற்று அதிகரிக்கும் சந்தர்ப்பம் இருந்தது. குறித்த விடயங்களை அவதானித்த நிலையில், இவ்வருடம் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கடைத் தொகுதிகளை வழங்குவதன் ஊடாக மக்களின் நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்த்துள்ளோம்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஏதுவாக இருக்கும் என்பதற்காக மன்னார் நகர சபை குறித்த தீர்மானத்தை நிறைவேற்றியது” என அவர் மேலும் தெரிவித்தார்