மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், பாகிஸ்தான் அணி 63 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

கராச்சி மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமட் ரிஸ்வான் 78 ஓட்டங்களையும் ஹெய்டர் அலி 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ரொமாறியோ செப்பர்ட் 2 விக்கெட்டுகளையும் அகீல் ஹொசைன், ஒசேன் தோமஸ், டோமினிக் ட்ரேக்ஸ் மற்றும் ஒடீயன் ஸ்மித் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 201 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 19 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், பாகிஸ்தான் அணி 63 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சாய் ஹோப் 31 ஓட்டங்களையும் ஒடீயன் ஸ்மித் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மொஹமட் வாசிம் 4 விக்கெட்டுகளையும் சதாப் கான் 3 விக்கெட்டுகளையும் ஷாயீன் அப்ரிடி, மொஹமட் நாவஸ் மற்றும் ஹரிஸ் ரவூப் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 39 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 6 பவுண்ரிகள் அடங்களாக 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஹெய்டர் அலி தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டி, இன்று கராச்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.