வெஜ் கட்லெட் சிறந்த சிற்றுண்டி ஆகும்.

இதனை  வீட்டில் ஆரோக்கியமான முறையில் எளிதாக செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  1. உருளைக் கிழங்கு – ½ கிலோ கிராம்
  2. பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (பெரியது)
  3. கேரட் – 3 எண்ணம் (நடுத்தரமானது)
  4. பச்சை பட்டாணி – 50 கிராம்
  5. கொத்தமல்லி இலை – 5
  6. கொத்து மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்
  7. கரம்மசாலா பொடி – 3 ஸ்பூன்
  8. உப்பு – தேவையான அளவு
  9. ரஸ்க் – 100 கிராம்
  10. இஞ்சி – ஆட்காட்டி விரலில் முக்கால் பாகம் அளவு
  11. வெள்ளைப் பூண்டு – 4 பற்கள் (பெரியது)
  12. அரிசிமாவுப் பொடி – 2 குழிக்கரண்டி அளவு
  13. எண்ணெய் – தேவையான அளவு (சுற்றிலும் ஊற்ற)
  14. நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்

வெஜ் கட்லெட் செய்முறை

உருளைக் கிழங்கினை வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். பச்சை பட்டாணியை தோலுரித்து வேக வைத்துக் கொள்ளவும்.

பெரிய வெங்காயத்தை தோலுரித்து மிகவும் பொடிதாக வெட்டிக் கொள்ளவும். கேரட்டை கழுவி துருவிக் கொள்ளவும்.

கொத்தமல்லி இலையை சுத்தம் செய்து சிறுதுண்டுகளாக வெட்டவும். ரஸ்க்கை மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும்.

இஞ்சி, வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி மிக்ஸியில் போட்டு விழுதாக்கிக் கொள்ளவும். அரிசிப் பொடியுடன் தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவுப் பதத்திற்குக் கரைக்கவும்.

முதலில் வாயகன்ற வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி காய விடவும். பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் ஓரளவு வதங்கியதும் அதனுடன் இஞ்சி, பூண்டு விழுதினைச் சேர்த்து வதக்கவும்.

ஒரு நிமிடம் கழித்து அதனுடன் துருவிய கேரட்டைச் சேர்த்து வதக்கவும்.

கேரட் வதங்கியதும் வேக வைத்த பச்சை பட்டாணியைச் சேர்த்து வதக்கவும். அதனுடன் கரம்மசாலா பொடி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் அதனுடன் மசித்த உருளைக் கிழங்கினைச் சேர்த்து அடுப்பினை சிம்மில் வைத்து ஒரு சேரக் கிளறவும்.

அதனுடன் தேவையான உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் அதனுடன் ரஸ்க் பொடி சேர்த்துக் கிளறி அடுப்பினை அணைத்து விடவும்.

பின்னர் அதனுடன் நறுக்கிய கொத்தமல்லி இலையைச் சேர்த்து ஒரு சேரக் கிளறவும். கலவையை நன்கு ஆற விடவும். பின்னர் கலவையை எலுமிச்சை அளவு உருண்டைகளாகத் திரட்டவும்.

பின்னர் உருண்டைகளை தட்டையாகத் தட்டி ஓரங்கள் பிரியாமல் ஒன்றுசேர்ந்தால் போல் இருக்குமாறு செய்யவும். இவ்வாறு எல்லா உருண்டைகளையும் ஒரே சீராகத் தட்டவும்.

தோசைக் கல்லினை அடுப்பில் வைத்து எண்ணெய் தேய்து காய விடவும். தோசைக்கல் காய்ந்ததும் தட்டைகளை அரிசி மாவில் முக்கி தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விடவும். இவ்வாறு எல்லாவற்றையும் செய்யவும். சுவையான கட்லெட் தயார்.

இதனை தக்காளி சட்னியுடன் சேர்த்து உண்ணலாம்