நாட்டின் 74 ஆவது சுதந்திர தினத்தை எளிமையாகவும் பிரமாண்டமாகவும் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவ மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“சவால்களை முறியடிக்கும் வளமான நாளை” என்ற தொனிப்பொருளின் கீழ் 74 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடப்படவுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக தேசத்தின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் எளிமையாகவும் பிரமாண்டமாகவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இம்முறை சுதந்திர தின விழா அணிவகுப்பில் 6500 பேர் பங்கேற்க உள்ளனர். இவர்களில் 3,463 இராணுவ வீரர்கள், 919 கடற்படை வீரர்கள், 804 விமானப்படை வீரர்கள், 336 பொலிஸ் அதிகாரிகள் 282 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், 437 சிவில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் 259 பாடசாலை மாணவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாரம்பரிய கலாசார நிகழ்வுகளும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் உள்ளடக்கப்படவுள்ளன.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட , இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, அணிவகுப்பில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு இணங்க தங்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
இதேவேளை சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மரம் நடும் வேலைத்திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளது