பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மறுசீரமைக்கப்பட்ட வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பொருளாதார மீட்சிக்காக எம்மால் முன்வைக்கப்படும் ஒன்பது யோசனைகளை முறையாக செயற்படுத்தினால் 6 – 12 மாத காலத்திற்குள் நிதி நெருக்கடியை முகாமைத்துவம் செய்து, சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி தன்மைக்கு தீர்வு காண முடியும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கை மீதான விவாதத்தின் போது சிறப்பு உரையாற்றுகையில் எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,
இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளள அறிக்கை மீதான விவாதம் இடம்பெறும் நிலையில் நிதியமைச்சர் ஒருவர் பதவி வகிக்காமல் இருப்பது கவலைக்குரியது. நாட்டின் தற்போதைய பிரதான பிரச்சினையாக பொருளாதார நெருக்கடியும் அதனையொட்டிய சமூக பிரச்சினையும் காணப்படுகிறது. பொருளாதார மீட்சிக்கான ஒன்பது யோசனைகளை அரசாங்கத்திடம் முன்வைக்கிறோம்.
நிதி நெருக்கடியினை எதிர்க்கொள்ள கடன் வழங்கல் நிறுவனங்களுடன் இருதரப்பு மற்றும் பல்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். கடன் செலுத்தல் மீள்பரிசீலனை செய்யப்பட்டு கடன் செலுத்தலுக்கு காலவகாசம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். வரையறுக்கப்பட்ட வெளிநாட்டு கையிருப்பினை அத்தியாவசிய சேவைக்கு பயன்படுத்தினால் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
அரசாங்கம் துரிதமாக பூகோள சட்டம் மற்றும் நிதி தொடர்பிலான ஆலோசனை குழுவை ஸ்தாபிக்க வேண்டும். துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்காவிடின் நாடு வங்குரோத்து நிலைமையை அடைவதை தடுக்க முடியாது.
இரண்டாவதாக மத்திய வங்கி சுயாதீனமாக செயற்படும் நிலைமை உருவாக்கப்பட வேண்டும். அரசியல் தலையீடுகளினால் மத்திய வங்கி தனது சுயாதீனத்தன்மையை இழந்துள்ளது. நாணய சபைக்கு திறமையானவர்கள் அரசியல் தலையீடின்றி நியமிக்கப்பட வேண்டும்.
மூன்றாவதாக கடன் செலுத்தல் காலவகாசம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். இந்தியா,ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு சர்வதேச மட்டத்தில் ஸ்திரமான நம்பிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும். நான்காவதாக ஒரு விடயம் குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டும். இலங்கை கடன் நிலைபேறான தன்மையை இழந்துள்ளது என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளமை பாரதூரமானது.
இலங்கை 16 சந்தர்ப்பங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டுள்ளது. தற்போதைய அறிக்கைக்கு அமைய இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் தொழினுட்பட உதவியை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியும். கடன் முகாமைத்துவம், கடன் மீள்செலுத்தல் மறுசீரமைக்கப்பட்டால் மாத்திரமே நிதியுதவி மற்றும் இதர ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும்.
ஐந்தாவதாக இருதரப்பு மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது அவசியமாகும்.ஜப்பான் , இந்தியா உட்பட வலய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு சாதக மற்றும் பாதக காரணிகளை ஆராய்ந்து பொது கொள்கை ஒன்றை துரிதமாக செயற்படுத்த வேண்டும். சிறந்த திட்டங்களை செயற்படுத்தினால் 6 தொடக்கம் 12 மாத வரையான காலப்பகுதியில் நிதி நெருக்கடியினை சீர் செய்ய முடியும்.
ஆறாவதாக குறுகிய கால திட்டத்தை செயற்படுத்த வேண்டும். நாட்டின் உணவு வீக்கம் 35 சதவீதத்தினாலும், மொத்த பொருளாதார வீக்கம் 15 சதவீதத்தினாலும் உயர்வடைந்துள்ளது. ஆகவே மறுசீரமைக்கப்பட்ட வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். ஏழ்மை கோட்டில் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்க செல்வந்த தரப்பினரிடமிருந்து ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ள முறையான பொறிமுறை செயற்படுத்தப்பட வேண்டும்.
ஏழாவதாக மேற்குறிப்பிடப்பட்ட யோசனைகளை செயற்படுத்த திட்டங்கள் படித்த ,அரசியல் நோக்கமற்ற தரப்பினரால் செயற்படுத்தும் பொதுமைப்படுத்தப்பட்ட திட்டத்தை அரசாங்கம் வகுக்க வேண்டும். நாட்டின் உணவு பாதுகாப்பு அச்சுறுத்தல் தன்மையில் உள்ளது என்பதை மறுக்க முடியாது. உணவு தட்டுப்பாடு அச்சுறுத்தலை தவிர்ப்பதற்காக அரசாங்கம் சர்வதேச உணவு தாபனம்,யுனிசெப் உட்பட ஐக்கிய நாடுகள் உணவு பாதுகாப்பு அமைப்புக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஒன்பதாவதாக பொருளாதார முன்னேற்றத்திற்கு பாரிய பங்களிப்பு வழங்கும் சிறு மற்றும் நடுத்தர தரப்பினருக்கும், தொழிற்துறை முயற்சியாளர்களுக்கும் நிவாரணம் வழங்கும் திட்டங்கள் நடைமுறைக்கு பொருந்தும் வகையில் செயற்படுத்தப்பட வேண்டும்.
மேற்குறிப்பிடப்பட்ட யோசனைகளை செயற்படுத்தினால் 6 – 12 வரையான மாத காலத்திற்குள் டொலர் கையிருப்பினை தக்கவைத்துக்கொள்ள முடியும். அதனை பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்திக்கொண்டால் சமூக கட்டமைப்பில் தோற்றம்பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றார்.