அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரும் தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்புக்களை தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) நடத்தி வருகின்றது. யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலுமாக இரண்டு சந்திப்புக்கள் இதுவரை இடம்பெற்றிருக்கின்றன. ஆனாலும் இந்தச் சந்திப்புக்களில் பங்கெடுத்த கட்சித் தலைவர்களுக்கு இடையில் இதுவரை புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட முடியவில்லை. அதனால், மீண்டும் எதிர்வரும் வாரம் கூடுவது என்ற முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக ரெலோ அறிவித்திருக்கின்றது.

இந்தச் சந்திப்புக்களில் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தற்போது முதன்மைக் கட்சியாக, அதிக பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்ற தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பங்கெடுக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சந்திப்பிற்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், அவர் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. அதனாலோ என்னவோ கொழும்புக் கூட்டத்திற்கு அவர் அழைக்கப்படவில்லை. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கொழும்புக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் தொடர் அழைப்பினைப் புறக்கணிக்க முடியாமல் அவர், இந்தச் சந்திப்புக்களில் கலந்து கொண்டிருந்ததை அவரது நடவடிக்கைகள் மூலம் அவதானிக்க முடிந்தது.

ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் கொழும்பு சந்திப்புக்கான அழைப்பினை சம்பந்தனிடம் விடுத்திருக்கின்றனர். அப்போது, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனை சந்திப்புக்கு அழைக்கவில்லையா என்று அவர் வினாவியிருக்கிறார். அதற்கு, ‘…சுமந்திரன் கட்சித் தலைவர் இல்லை. அதனால் அவரை அழைக்கவில்லை. இது கட்சிக் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு..’ என்று செல்வமும் சித்தார்த்தனும் பதிலளித்திருக்கிறார்கள். இதனை உள்வாங்கிக் கொண்ட சம்பந்தன், கொழும்புச் சந்திப்பில் ரெலோ அமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும், அதன் பேச்சாளரும் கலந்து கொண்டமை தொடர்பில் நேரடியாக கேட்டிருக்கின்றார். கட்சித் தலைவர்கள் கூட்டமென்றால், ரெலோ அமைப்பின் தலைவரைத் தாண்டி ஏனையவர்கள் எவ்வாறு சந்திப்பில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்று?

தமிழரசுக் கட்சி அல்லது கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைக்காத அரசியல் சந்திப்புக்களை சம்பந்தன் விரும்புவதில்லை. அது, தம்மைத் தாண்டிய தரப்பொன்று தமிழ்த் தேசிய அரசியலுக்குள் கோலொச்சக் கூடாது என்ற நோக்கிலானது. எப்போதுமே தமிழரசுக் கட்சியைப் பிரதானப்படுத்தியே கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய அரசியலும் இயங்க வேண்டும் என்று சம்பந்தன் நினைப்பவர். அப்படியான நிலையில், ரெலோ அமைப்பின் இவ்வாறான முன்னெடுப்புக்களை அவர் கொஞ்சமும் ரசிக்கவும் இல்லை. கடந்த பாராளுன்றத் தேர்தலுக்கு முன்னர் வரையில் சம்பந்தனின் நிலைப்பாடுகளுக்கு அப்பால் ரெலோ எந்தத் தருணத்திலும் இயங்கியதில்லை. தமிழரசுக் கட்சி ரெலோவின் உறுப்பினர்களை களவாடி தன்னோடு சேர்ந்துக் கொண்ட போதிலும் கூட ரெலோ சம்பந்தனின் சொல்லுக்கு அப்பால் கொஞ்சமும் அசைந்ததில்லை.

ஆனால், கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பில் வெற்றிகொள்ளப்பட்ட பத்து பாராளுமன்ற ஆசனங்களில் மூன்றை ரெலோ பெற்றிருந்தது. அது, கூட்டமைப்புக்குள் மாத்திரமல்ல, தமிழ்த் தேசிய அரசியலுக்குள்ளும் தமிழரசுக் கட்சிக்கு அடுத்த நிலையில் அதிக பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்ற அடையாளத்தைக் கொடுத்தது. அது, ரெலோவின் முக்கியஸ்தர்களை குறிப்பிட்டளவு உற்சாகப்படுத்தியிருக்கலாம்.

தமிழ்த் தேசிய அரசியல் என்றால் கூட்டமைப்பு, அதன் தலைவர் சம்பந்தன், தமிழரசுக் கட்சி, எம்.ஏ.சுமந்திரன் என்ற தரப்புக்களைச் சுற்றிச் சுழன்று கொண்டிருப்பதானது, தங்களுடைய இடத்தை எதிர்காலத்தில் அழித்துவிடும் என்கிற அச்ச உணர்வு ரெலோவினை தனித்த அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வைத்திருக்கின்றன. ஆனால், ரெலோவின் அண்மைய முனைப்புக்கள் அனைத்துமே சிறுபிள்ளைத்தனமாகவே பதிவாயிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை முன்வைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைத்து ஆணையாளர் அலுவலகத்துக்கு கடிதமொன்றை அனுப்பியமை. அந்தக் கடித உள்ளடக்கம் தொடங்கி, கடிதம் அனுப்பப்பட்ட முறை வரை விமர்சனத்துக்கு உள்ளானது. தமிழரசுக் கட்சியின் தலைமை அப்போதும் அந்தக் கடிதத்தில் கையெழுத்திடவில்லை. அந்தப் பிரச்சினைகள் நிறைவடைந்ததும், தற்போது 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரும் சந்திப்புக்களை நடத்தி வருகின்றது.

13வது திருத்தம் தமிழ்த் தரப்பினால் நிராகரிக்கப்பட்ட ஒன்று. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு 13வது திருத்தம் தீர்வாக அமையாது என்பதை ராஜபக்ஷக்கள் கூட ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். முள்ளிவாய்க்காலில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த போது, தமிழ் மக்களுக்கான தீர்வாக 13 பிளஸ் பற்றி அப்போதைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ உறுதி வழங்கியிருக்கின்றார். உரிமை அரசியலை முன்னெடுக்கும் எந்தத் தரப்பும், தீர்க்கமான பார்வையோடு இருக்க வேண்டும். சந்தர்ப்பங்களை கையாண்டு இலக்கினை அடைவதற்கு முயற்சிக்க வேண்டும். ஆனால், ரெலோவும், அதன் தலைமையும் சந்தர்ப்பங்களையும் சூழ்நிலையையும் புரிந்து கொள்ளாமல் தங்களின் தனிப்பட்ட கட்சி அரசியலுக்காக காலாவதியான விடயங்களை தூக்கி சுமக்கின்றன. தமிழ் மக்களின் உரிமைகளை புடுங்கிக் கொண்ட தென் இலங்கையே 13 பிளஸ் பற்றி பேசுவதற்கு தயாராக இருக்கும் போது, 13வது திருத்தம் பற்றி ரெலோ பேச ஆரம்பித்திருப்பது தென் இலங்கையை மிகவும் சந்தோசப்படுத்தும். எப்போதுமே இலக்கும் தீர்க்க தரிசனமும் போராட்ட குணமும் அற்ற ஒரு எதிரியையே அனைவரும் விரும்புவர். இன்றைக்கு அப்படியான ஒரு தீர்க்கதரிசனமில்லாத தரப்பாக தமிழ் மக்களை தென் இலங்கைக்கு முன்னால் நிறுத்துவதற்கு ரெலோ முனைகின்றது. இப்படியான கட்டங்கள்தான் ரெலோ உண்மையில் யார் நலனுக்காக இயங்குகின்றது, யாரினால் இயக்கப்படுகின்றது என்ற கேள்விகளை எழுப்ப வைக்கின்றது.

தமிழ்த் தேசிய அரசியலில் 13வது திருத்தத்தை தீர்வாக முன்வைத்துக் கொண்டு எந்தக் கட்சியினாலும் வெளிப்படையாக இயங்க முடியாது. ஆனால், ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் போன்ற அமைப்புக்கள் இந்தியாவின் அனைத்து அசைவுக்கும் ஏற்ப கடந்த காலங்களில் ஆடி வந்திருக்கின்றன. அது, 1980களில் ஆரம்பித்துவிட்ட ஒன்று. 13வது திருத்தம் என்பது எந்தத் தருணத்திலும் இலங்கை அரசியலமைப்பில் இருந்து நீக்கப்பட்டுவிடக்கூடாது என்று இந்தியா நினைக்கின்றது. ஏனெனில், அது இலங்கை- இந்திய ஒப்பந்தம் வலுவிழக்காமல் இருப்பதற்கான சான்று. அப்படியான நிலையில், தமிழ்த் தேசிய அரசியல் 13வது திருத்தத்தை நிராகரிப்பதை இந்தியாவினால் ரசிக்க முடிவதில்லை. அதனால்தான், தன்னுடைய கைக்குள் கட்டுப்பட்டிருக்கும் தரப்புக்களை முன்னிறுத்திக் கொண்டு 13வது திருத்தத்தை காப்பாற்ற நினைக்கின்றது. தன்னுடைய பிராந்திய நலன், பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் சார்ந்து இந்தியா இயங்குவதைக் குறை சொல்ல முடியாது. ஆனால், சொந்த மக்களை அடகு வைத்து இந்தியாவின் நலன்களை நிறைவேற்ற வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் ரெலோவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போதுதான், அதனை முழுமையாக எதிர்க்க வேண்டிய வருகின்றது.

13வது திருத்தம் தொடர்பிலான ரெலோவின் இந்தச் சந்திப்புக்களின் இறுதியில் தயாரிக்கப்படும் ஆவணங்களில் சம்பந்தனும் விக்னேஸ்வரனும் கைச்சாத்திடுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. இந்தியாவை திருப்திப்படுத்துவதற்கான விக்னேஸ்வரன் கையெழுத்திட்டாலும், சம்பந்தன் கையெழுத்திடும் வாய்ப்பு இல்லை. ஏனெனில், தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடுகளுக்கு அப்பால் நின்று சம்பந்தன் செயற்படமாட்டார். அவ்வாறான நிலையில், ரெலோவின் ஆவணம் இறுதி செய்யப்பட்டாலும் அது பெரிய கவனங்களை தமிழ் மக்களிடம் பெறாது. அந்தளவில், ஓரளவுக்கு நிம்மதி கொள்ளலாம்.

-தமிழ்மிரர் பத்திரிகையில் வெளியான பத்தி:புருசோத்தமன்