நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் பாடசாலை நாட்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பிரித்து வாரத்தில் மூன்று நாட்கள் பாடசாலைக்கு அழைக்குமாறு ஆசிரியர் சங்கங்கள் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தன.

இது தொடர்பாக பேசிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ஐந்து நாட்கள் பாடசாலை செயல்படும் போது ஒரு ஆசிரியர் மூன்று நாட்களுக்கு மட்டுமே பணிக்கு வருவதற்கான அட்டவணையை வகுக்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

கொரோனா தொற்றின் போது பின்பற்றப்பட்டதைப் போன்ற ஒரு முறையை பாடசாலைக்கு மாணவர்கள் வருவதற்கு அமுல்படுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவ்வாறு செய்யத் தவறினால் அதற்குப் பதிலாக எரிபொருள் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

இதேவேளை, தற்போதுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆசிரியர் சங்கங்களுடன் கலந்துரையாடவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்