உலகில் தற்பொழுது காணப்படும் சூழ்நிலையில், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவது, குறிப்பாக இலங்கை உள்ளிட்ட அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு மிகவும் சவாலானதாக மாறியுள்ளது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
உலகம் முன்னெப்போதும் இல்லாதளவு சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் அதன் விளைவுகள், இயற்கை அழிவுகளினால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அதிகரித்துவரும் மோதல்களால் மனித சமூகத்துக்கு தாக்கம் ஏற்பட்டிருப்பதால் இந்த நிலைமை தோன்றியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இந்த சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கை அயராது உழைத்து வருவதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
அங்கோலா நாட்டின் லுவாண்டா நகரில் நடைபெற்ற அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் 147வது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இவ்வாறு தெரிவித்தார்.
முன்னெப்போதும் இல்லாத பூகோள சவால்களுக்கு மத்தியில் இலங்கை கடந்த ஆண்டு மிகவும் சவாலான காலகட்டத்தைச் சந்தித்ததாகவும் தெரிவித்த சபாநாயகர், பரவியிலுள்ள சமூக அமைதியின்மை மற்றும் எதிர்ப்புக்களால் ஏற்பட்ட சவால்களை வெற்றிகொள்ளும் செயற்பாட்டில் இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களை உறுதியாக முன்னெடுத்துச் சென்று அரசாங்கமும், பொதுமக்களும் அமைதியான அரசியல் மாற்றமொன்றை நோக்கிப் பயணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.